Thursday, March 5, 2015

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவங்கியது
சென்னை: நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கின. தமிழ்நாட்டில், 10ம் வகுப்பில், 29 ஆயிரம் பேரும்; பிளஸ் 2வில், 12 ஆயிரம் பேரும், இத்தேர்வில் பங்கேற்றனர்.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டையூ,
டாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை (தெற்கு) மண்டலத்தில், 10ம் வகுப்பில், 1.20 லட்சம் பேரும்; பிளஸ் 2வில், 70 ஆயிரம் பேரும், தேர்வில் பங்கேற்றனர்.தமிழகத்தில், 450 பள்ளிகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் பேர், பிளஸ் 2 தேர்விலும்; 29 ஆயிரம் பேர், 10ம் வகுப்புத் தேர்விலும் பங்கேற்றனர்.

Monday, March 2, 2015

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்: தமிழகத்தில் 46,000 பேர் பங்கேற்பு
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்குகின்றன. மார்ச் 2-இல் தொடங்கும் பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு 26-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. 10-ஆம் வகுப்பில் பள்ளி அளவிலான தேர்வு மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் இருந்து 16 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுத உள்ளதாக சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் சுதர்சன ராவ் தெரிவித்தார்.
சென்னை மண்டலத்தில் பிளஸ் 2 தேர்வை 70 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 1.7 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: 10-ஆம் வகுப்புத் தேர்வை நிகழாண்டு நாடு முழுவதிலும் 3,537 தேர்வு மையங்களிலிருந்து 13,73,853 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை 3,164 தேர்வு மையங்களிலிருந்து 10,40,368 பேர் எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 3.37 சதவீதம் அதிகரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 1.01 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வுகளைக் கண்காணிக்க சிறப்புப் பார்வையாளர்கள், பறக்கும் படைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கட்டுகள் 4 உதவி கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் பிரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பில் பார்வையற்றோர் 391 பேரும், கற்றலில் குறைபாடுடையவர்கள் 988 பேரும், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் 225 பேரும், உடல் ஊனமுற்றோர் 904 பேரும், மன வளர்ச்சி, அறிவுத் திறன் குறைபாடுடையவர்கள் 147 பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் பார்வைற்ற 363 பேர் உள்பட மொத்தம் 2,066 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்காக கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. இதில், 24 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த ஆண்டு, நாளை ஒரே நாளில் துவங்குகிறது. 10ம் வகுப்புக்கு, மார்ச் 26ம் தேதியும்; பிளஸ் 2வுக்கு, ஏப்ரல் 20ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன. இந்த ஆண்டு, 10ம் வகுப்பில், 8,17,941 மாணவர்; 5,55,912 மாணவியர் என மொத்தம், 13,73,853 பேர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2வில், 6,07,383 மாணவர்; 4,32,985 மாணவியர் என மொத்தம், 10,40,368 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், 1 சதவீத மாணவர்கள் அதிகமாக தேர்வெழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை, அந்தந்த மண்டல அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.