Tuesday, May 26, 2015

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் தலா, 33 சதவீத மதிப்பெண், செய்முறை மற்றும் தியரி தேர்வுகளில் பெற்றால் தான், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகின்றனர். இத்தேர்வில், பாட வாரியாக, மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனியே கிரேடு முறை வழங்கப்படுகிறது. ஆங்கில எழுத்துக்களில், 'ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி1, டி2, இ' என, ஒன்பது வகை கிரேடு முறை வழங்கப்படுகிறது.இந்த கிரேடு முறையில், டி2க்குக் கீழ், இ கிரேடு பெற்றால், அவர் தேர்ச்சி பெறாதவர் ஆவார். ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர், ஒரு மாத இடைவெளியில் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர், மீண்டும் அடுத்த ஆண்டுத் தேர்வில், அனைத்து பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதை மீண்டும் எழுதத் தேவையில்லை. பழைய மதிப்பெண்ணே கணக்கில் எடுக்கப்படும். இல்லையென்றால், செய்முறை மற்றும் 'தியரி' தேர்வு இரண்டையும் மீண்டும் அடுத்த கல்வி ஆண்டில் எழுத வேண்டும். மதிப்பெண் பட்டியலுக்கான சான்றிதழில், பாடவாரியாக மதிப்பெண் மற்றும் தனியாக கிரேடு குறிக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்ஜி., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?
சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் கணிதத்துக்கு, 100;இயற்பியல், வேதியியலுக்கு தலா, 50 மதிப்பெண் கணக்கிடப்பட்டு, மொத்தம், 200க்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு அவர்கள் கணிதத்தில், 100க்கு பெற்ற மதிப்பெண் அப்படியே எடுத்துக் கொள்ளப்படும். இயற்பியல் மற்றும் வேதியியலில், அவர்கள், 100க்கு எடுத்த மதிப்பெண், தலா, 50க்கு என கணக்கிடப்படும் என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

Saturday, May 23, 2015

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியுமா? சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பம்


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது.
விண்ணப்பிக்க, வரும் 29ம் தேதி கடைசி நாள். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. இதனால், தாங்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுமோ என, சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, மருத்து மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது:
முடிவுகள் தாமதம்:
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் தாமதம் ஏற்படுவதால், எந்த சிக்கலும் இல்லை. வரும் 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க, 29ம் தேதி வரை அவகாசம் உள்ளது; அதற்கு முன், தேர்வு முடிவுகள் வந்து விடும்; மேலும், தாமதம் ஏற்படும் என்றால், மாற்றாக என்ன செய்வது என்பது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tuesday, May 19, 2015

ஐ.சி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியீடு


மத்திய அரசின், இந்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,க்கான, 10ம் வகுப்பு மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் - ஐ.எஸ்.சி., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.ஐ.சி.எஸ்.இ., மற்றும் ஐ.எஸ்.சி., பாடத்திட்டத்துக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு, நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் நடந்தது.
இந்தியாமற்றும் வெளிநாடு மாணவ, மாணவியர், பிளஸ் 2வில், 72 ஆயிரம் பேர்; 10ம் வகுப்பில், இரண்டு லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று காலை, டில்லில் உள்ள ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் மூலம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்புத் தேர்வில், கோல்கட்டா, மும்பையைச் சேர்ந்த,மூன்று பேர், 500க்கு 496 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்;கோல்கட்டாவை சேர்ந்த மாணவர், பிளஸ் 2வில் முதலிடம் பெற்றுள்ளார்.பத்தாம் வகுப்பில், 98.49 சதவீதம் பேரும், பிளஸ் 2வில் 96.28 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக, ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை, www.cisce.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.