புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ., வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பள்ளிகளில், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் குழு அமைக்க வேண்டும். அதில், பள்ளி முதல்வர், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, ஒரு மாணவர், ஒரு மாணவி, ஆசிரியர் அல்லாத பள்ளியின் அலுவலர் ஒருவர் இடம்பெற வேண்டும்.
பள்ளி வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாணவியர் மற்றும் மாணவர் இடையே பாலின வேறுபாட்டை போக்கும் வண்ணமும், மாணவியரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும் முறை குறித்தும் பாடங்கள் எடுக்க வேண்டும்.
மாணவ, மாணவியரிடையே போட்டிகள் வைத்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். மாணவ, மாணவியர் புகார் தருவதற்கான புகார் பெட்டி உரிய இடங்களில் அமைக்க வேண்டும்.
கட்டணமில்லா தொலைபேசி எண், பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி எண், புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலரின் எண் போன்றவற்றை அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.